Saturday, August 17, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 14

"சத்தியமா இப்படி ஒரு மேட்டரை நாங்க எதிர்பார்க்கலைப்பா, சூப்பரு" என்று குதூகலித்தான் ராதே.

"சும்மாவா? சேட்டா 2C வாங்கியிருக்காப்ல" என்றான் பாலா.

"நான் எப்பவுமே சொல்றதைத் தான் செய்வேன்" என்று சூப்பர் ஸ்டார் போல மிமிக்ரி செய்த ஸ்ரீகாந்த் "என்ன, அந்த ஹர்கிரத் பயலுக்கும் கட்டிங் வெட்ட வேண்டியதாப் போச்சு"

"ஆனா செம ஆக்டிங் போங்க" என்றான் பாலா.

"எனக்கு அதிலே தாங்க விருப்பம். கிரிக்கெட் சும்மா டைம் பாஸ். எப்படியாச்சும் ஹீரோவா நடிச்சு பெரிய ஆளாகிடணும். அதான் என் கனவு"

மேட்ச் ஜெயிக்குமா தோற்குமா என்று பந்தயம் கட்டுவது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த மாதிரியான வித்யாசமான பரபரப்பான விஷயங்களில் பந்தயம் கட்டுவது லேட்டஸ்ட் டிரெண்ட் - போட்டிக்கு நடுவே மைதானத்தில் நாய் வருமா வராதா, ஒளி வெள்ள விளக்குகள் பழுதாகுமா, ஒரு குறிப்பிட்ட நபரை எத்தனை முறை டிவியில் காட்டுவார்கள் போன்ற பல விஷயங்களில் ஒன்று தான் ஸ்ரீகாந்த் ஹர்கிரத்திடம் அறை வாங்கிய சம்பவமும்.

*********************************************************************************

"மன்னிச்சிடுங்க சார். எங்களால ஜெயிக்க முடியல" என்று மிகவும் வருத்தத்துடன் கூறினான் ஷயன் - எதிரே மகேஷ்.

"அட விடுப்பா, வெற்றி தோல்வி எல்லாம் கிரிக்கெட்ல சகஜம். அடுத்த முறை பார்த்துக்கலாம்" என்று அசால்ட்டாக சொன்னான் மகேஷ்.

"எவ்ளோ நம்பிக்கையோட இருந்திருப்பீங்க. இப்போ..." என்று இழுத்தான் அருகே இருந்த ஹர்கிரத்.

"பரவால்லப்பா, சும்மாப் போட்டு அலட்டிக்காதீங்க. நம்ம டீமுக்கு நல்ல பெயர் வந்திருக்கு. ஒட்டுமொத்த ப்ராண்ட் மதிப்பும் கூடியிருக்கு. என் வியாபாரத்தில் இல்லாத தோல்விகளா, தடைகளா? எப்படா என் எண்ணைக் கிணறுகளை வளைச்சுப் போடலாம்னு பன்னாட்டுக் கம்பெனிகள் நம்ம அரசாங்கம் மூலமா எவ்ளோ பிரச்சினை பண்றாங்க தெரியுமா? அதுக்கு முன்னாடி இதெல்லாம் தூசு."

இருவரும் சிறிது நேரம் மெளனமாக இருந்தனர். பிறகு மகேஷ் "சரிப்பா, கிளம்புங்க. எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு"

இருவரும் மகேஷின் அறையை விட்டு வெளியே வந்து தத்தம் காரை நோக்கி நடந்தனர். ஹர்கிரத் காரை இயக்கியவுடன் செல்போன் ஒலித்தது. திரையில் மகேஷ்.

"என்ன சார்?"

"கொஞ்சம் வாலை சுருட்டிக்கிட்டு இரு. இல்லை, போட்டுத் தள்ளிடுவேன்" என்று கூறியதும் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

"நம்மளோட எந்த மேட்டர் இவருக்குத் தெரிஞ்சிருக்கும்னு தெரியலையே" என்று யோசித்தவாறே காரை ஓட்டலானான் ஹர்கிரத்.

*********************************************************************************

"கலக்கிட்டீங்க மாப்ளே. உங்களை என்னமோ நினைச்சேன், சாதிச்சிட்டீங்க" என்று பெருமை பேசினார் பத்மநாபன்.

"பைனல்ஸ் போச்சே மாமா" என்று வருந்தினான் ரகு. அருகில் பாரு எவ்வித உணர்ச்சியும் இன்றி இருந்தாள்.

"கல்லா கட்டிடுச்சே, இனிமே தூள் கிளப்பிடலாம்"

"மொஹிந்தர் இருந்தானோ, நாம பொழச்சோம்"

"அவன் தான் அடுத்த ஸ்டார்னு சார் அன்னிக்கே சொன்னாரு. அது நிஜமாகிடுச்சு" என்றார் நடேசன்.

"அவன் ராசி அப்படி. தொட்டதெல்லாம் துலங்கிடும்" என்றார் தனது ராசி மோதிரங்களை நிரடிக்கொண்டே.

பாரு இடைமறித்து, "அப்பா, அந்த ஷிப்பிங் லோன் சம்பந்தமா பேங்கோட மீட்டிங் இருக்கு. வாங்க போகலாம்" என்றாள் - குரலில் சற்று வறட்சி.

"நான் எதுக்கும்மா? நடேசன், நீங்க போயிட்டு வாங்க"

இருவரும் கிளம்பியவுடன் "மாமா, நானும் கிளம்பறேன், ஒரு சின்ன டீம் பார்ட்டி இருக்கு"

"போயிட்டு வாங்க. ஆமாம், இந்த மொஹிந்தரோட நண்பின்னு சொல்லிக்கிட்டு ஒரு சினிமாக்காரி அடிக்கடி சென்னையில் தங்கறாளே, என்ன சங்கதி?"

"அது அவங்க இரண்டு பேரும் குடும்ப நண்பர்களாம். கண்டமேனிக்கு சுத்தறதைப் பார்த்தா எனக்கும் ஒரு மாதிரியாத் தான் இருக்கு. மொஹிந்தர் கிட்ட பேசறேன்"

"அதுக்கு உன் பேர்ல எதுக்குய்யா ரூம் புக் பண்ணணும்? பார்த்துக்க, அவ்ளோ தான் சொல்வேன்"

அதிர்ச்சியுற்ற ரகு அங்கேயிருந்து கிளம்பினான். பாருவின் உம்மணாமூஞ்சி ரகசியம் அவனுக்கு இப்போது புரிந்தது.

********************************************************************************

"வாவ், என்னால இன்னமும் நம்ப முடியலை" என்று ஸ்வராஜை இறுகத் தழுவி உதட்டில் முத்தமிட்டாள் ஷீலா. இருவரின் உடல்களும் போர்வைக்குள் ஒளிந்திருந்தன. வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இவர்கள் இருவரையும் விடுமுறைக்கு ஆஸ்திரேலியா வரவழைத்தான் ஷைனி. அவனது விருந்தினர் இல்லத்தில் தான் மேற்கூறிய காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

"உள்ளே வரலாமா?" என்று கேட்டுக் கொண்டே நுழைந்தனர் ஷைனியும் அவனது மனைவியும். குரல் கேட்டு ஷீலா முடிந்தவரை தன்னை சரி செய்து கொண்டாள்.

தேநீர் மற்றும் தின்பண்டங்களுடன் இருவரும் அமரந்தனர்.

"நீங்க என் விருந்தாளி, அப்புறம் பாஸ். அதான் நானே கொண்டு வந்தேன்" என்று தேநீரை கோப்பைகளில் ஊற்றி அனைவருக்கும் கொடுத்தான்.

ஷைனி ஷீலாவிடம் கோப்பையைக் கொடுக்கும்போது குறும்பாகப் பார்த்தான். அதே நேரம் ஸ்வராஜ் ஷைனியின் மனைவியை கண்களால் அளவெடுத்துக் கொண்டிருந்தான் - மாற்றான் தோட்டத்து மல்லிகை தான் எப்பவும் மணக்கும்.

ஷைனி "நம்ம வெற்றியைப் பற்றி மத்த டீம்கள் என்ன பேசிக்கறாங்க?"

ஸ்வராஜ் "அவங்களால இன்னமும் நம்ப முடியல. லலித்ஜி ஏதோ கோல்மால் பண்ணியிருக்காருன்னு பேசிக்கறாங்க"

"உங்க ஊர்ல திறமைக்கு மரியாதையே கிடையாதா?" என்று வெறுப்பாகக் கேட்டான் ஷைனி

"கோல்மால் பண்றதும் திறமை தான்" என்று கூறி சிரித்தான் ஸ்வராஜ். ஷைனிக்கு சிரிப்பு வரவில்லை.

பேச்சை மாற்ற நினைத்த ஸ்வராஜ் "கோகுல் பற்றி என்ன நினைக்கறீங்க? நம்ம டீம்ல எடுக்கலாமா?'

"கிளாஸ் ப்ளேயர். கண்டிப்பா எடுங்க. ஆனால் அவர் வருவாரா?"

"அந்த டீம்ல அவர் நிலைமை சரியில்லைன்னு கேள்விப்பட்டேன். பெரிசுங்களோட ஒத்துப் போகலைன்னு நினைக்கறேன். முயற்சி பண்றேன்"

"செம சான்ஸ், விட்டுடாதீங்க. அப்புறம், எங்களுக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. வெளியே போயிட்டு வர்றோம். மதிய சாப்பாடு எங்க கூடத்தான். இப்போ நீங்க தொடருங்க" என்று கண்ணடித்து விட்டுச் சென்றான் ஷைனி .

"நிஜமாவே கோகுலை எடுக்கப் போறீங்களா?" என்று கேட்டாள் ஷீலா.

"அவன் நம்ம டீமுக்கு வந்தா அவனோட "அப்பாவி + நல்லவன்" இமேஜ் நாம பண்ற தில்லுமுல்லுகளை மறைச்சுடும். அதான்"

"அடேங்கப்பா, அந்தத் தில்லுமுல்லு ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போ நான் தில்லுமுல்லு பண்ணப் போறேன், ஆஸ்திரேலியா டீ அபாரம்" என்று சில்மிஷத்துடன் ஸ்வராஜின் மீது பாய்ந்தாள் ஷீலா.

******************************************************************************

"மும்பை சென்னை ரூட்டிங்க்ல ஏகப்பட்ட மேட்ச் பிக்சிங் கால்ஸ் மேடம். நீங்க கொஞ்சம் ஆளுநர் கிட்ட பேசி அனுமதி வாங்கிக் குடுத்தீங்கன்னா கேஸ் ஓபன் பண்ணிடலாம்" என்று முதலமைச்சரிடம் கூறினார் தில்லி போலிஸ் கமிஷனர் அஜய் த்ரிபாதி.

"ஏன்யா ஆட்சிக்கு உலை வைக்கறே?" என்று எரிச்சலடைந்தார் ரேகா தீட்சித்.

"என்ன மேடம் சொல்றீங்க?"

"பின்னே, மும்பையில் நம்ம கட்சி ஆட்சி, சென்னையில் கூட்டணி கட்சி ஆட்சி  - பிரச்சினை வராதா?"

"ஆனால் கால்ஸ் துபாய் வரைக்கும் ரூட் ஆகியிருக்கு. உளவுத்துறை வேற கூடிய சீக்கிரம் நம்ம நாட்டுல ஒரு பெரிய தீவிரவாதத் தாக்குதல் நடக்கலாம்னு எச்சரிக்கை ரிபோர்ட் அனுப்பியிருக்காங்க"

"அவங்களுக்கு வேற வேலையே கிடையாது. எதையாச்சும் டைப் அடிச்சு அனுப்பிடுவாங்க"

"இல்லை மேடம், நாம கொஞ்சம்...."

"தகவலுக்கு நன்றி. போயிட்டு வாங்க"

அஜய் கிளம்பும்போது "இத பாருங்க, நீங்க என் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லைங்கறதுக்காக எதையாச்சும் எக்குத்தப்பா பண்ணிடாதீங்க. விஷயம் தெரிஞ்சும் மும்பை போலீசே சும்மா இருக்காங்கன்னா இதோட பின்னணியை யோசிச்சுப் பாருங்க. சூதானமா நடந்துக்கோங்க" என்று எச்சரித்தார் ரேகா.

*********************************************************************************

சரியாக 5 மாதங்களுக்குப் பிறகு மும்பையில் நடந்த தொடர் தீவிரவாதத் தாக்குதலில் 200 பேர் உயிரிழந்தனர். ஒரு தீவிரவாதி பிடிபட்டான். அரசாங்கம் வழக்கம்போல விசாரணை கமிஷன் அமைத்தது. வலைதளங்களில் கருத்துக்கள் குவிந்தன. போராட்டத்தின் குறியீடாக பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஊர்வலங்கள் நடத்தியதால் மெழுகுவர்த்தி விற்பனை அமோகமாக நடந்தது. அடுத்த இரண்டு மாதங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்ந்ததில் மெழுகுவர்த்திகள் அணைந்து போயின.










ஆட்டம் தொடரும்......








Related Posts Plugin for WordPress, Blogger...