Monday, June 6, 2011

பாசத்தலைவனுக்கு ஒரு பாராட்டு விழா!!!



அயராது தமிழ்ப்பணி செய்துவரும் நம்ம தலைவரை சென்னை சூப்பர் கிங்சுக்காக நடத்தப்படும் ஒரு பாராட்டு விழாவுக்கு தலைமை தாங்குமாறு அழைத்தோம். அது எப்படி "பாசத்தலைவனுக்குப் பாராட்டு" விழாவாக மாறுதுன்னு பாருங்க: (assuming he is the CM)

முதலில் கடவுள் வாழ்த்து, பிறகு எல்லா வீரர்களுக்கும் உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட தங்கத்திலான பேட் மற்றும் பந்து பரிசாக அளிக்கப்படுகிறது.

தோனி மனதிற்குள், "நல்ல வேளை அப்டோமேன் guard குடுக்கல, இல்லேன்னா ரொம்பக் கேவலமா இருக்கும்"

முதலில் வித்தகக் கவிஞர் விஜய் பேச வருகிறார்:
தமிழுக்கு வணக்கம், எங்களைத் தலை நிமிரச் செய்த தமிழனுக்கு வணக்கம், 88 வயதிலும் அயராது உழைக்கும் இளைஞனுக்கு இந்த இளைஞனின் வணக்கம்.
இளைஞர்களைப் பாராட்ட இந்த இளைஞனை விட்டால் வேறு யார் பொருத்தமாக இருப்பார்?
கிரிக்கெட்டில் உயர்ந்தது ஆறு. இவரோ தமிழகத்தில் ஆறு முறை முதல்வராகப் பதவியேற்று உயர்ந்து நிற்பவர்.

ஸ்ரீனிவாசன், "வீணாப்போன படத்தில காசு குடுத்து நடிச்சிட்டு பேச்சைப் பாரு, போய் உக்காரு போ""

"தலை இருக்க வால் ஆடக்கூடாது, எனவே எனது உரையை முடித்துக் கொள்கிறேன்"

அடுத்து வைரமுத்து,

"நல்ல வேளை, எங்கே விஜய் ஒரேயடியாகப் பாராட்டி எங்களுக்கு வேலை இல்லாமல் செய்து விடுவாரோ என நினைத்தேன், தப்பித்தேன்"

அனல் பறக்க பிரசாரம் செய்வதில் இவர் விஜய், நல்ல பல திட்டங்களை அறிவித்து தமிழர்களைக் காப்பதில் இவர் ஒரு பத்ரிநாத், வேகமும் விவேகமும் ஒருங்கே இணைந்து செயலாற்றுவதில் இவர் ஹஸ்ஸி, எதிர் அணியினரை தடுமாறச் செய்வதில் இவர் அஷ்வின், சோதனையான காலத்தில் வீரர்களுக்குப் பக்கபலமாக இருப்பதில் ராய்னா, மொத்தத்தில் சூட்சுமமாக செயல்படுவதில் இவர் தோனி. அவர் CSKவின் தலைவர், இவர் தமிழர்களுக்கெல்லாம் தலைவர். வணக்கம்.

Srinivasan - "பத்து ரூபா குடுத்தா நூறு ரூபாய்க்கு பேசிட்டுப் போறான் பாரு"

வாலி என்ன பேசுவது என்று தெரியாமல் யோசித்தவாறே மைக் பிடிக்கிறார்,

"கிரிக்கெட்டுக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்? பாடையிலே போக வேண்டிய வயதில் எதற்கு பாராட்டு விழா? - என்றெல்லாம் உங்கள் மனதில் எண்ணங்கள் தோன்றுவதை நான் அறிவேன். (அப்பாடா, இந்த ஆள் தான்யா ஏதோ கொஞ்சம் ஒழுங்கா பேசறான்). கிரிக்கெட்டிலும் அரசியலிலும் ராஜதந்திரம் மிகவும் முக்கியம், எனவே இவரைப் போல ஒரு சிறந்த ராஜதந்திரி தலைமை வகிப்பது தான் சாலப் பொருத்தம். (அடிச்சான் பாரு அந்தர் பல்டி). டோனி எதற்கும் தலைவரிடம் ஒரு வாரம் டியூஷன் பயில்வது அவரது வாழ்க்கைக்கு உதவும். வணக்கம்.



"ஐயோ, இவனுங்க கொடுமை தாங்க முடியலையே முருகா"

டோனி, "சார் சீக்கிரம் செட்டில் பண்ணுங்க சார், பொண்டாட்டி தி நகர்
போயிருக்கா ஷாப்பிங் பண்ண. துட்டு வேணும் சார்"

"இருப்பா, இவனுங்க அக்கப்போரே தாங்கல, நீ வேற"

அடுத்து பார்த்திபன்,

"சூரியனுக்கே டார்ச் அடிக்கறதுன்னு நான் காமெடிக்காக சொல்லியிருக்கேன், ஆனா நிஜமாகவே 5 மணிக்கு எழுந்து டார்ச் லைட்டோட வாக்கிங் போய் அந்த சூரியனுக்கே டார்ச் அடிச்சு எழுப்பறவர் நம்ம தலைவர். எல்லாரும் சொல்றாங்க CSK தான் பெஸ்ட் டீம்னு. அதுல ஒண்ணும் பெரிய ஆச்சர்யம் இல்லை. டீமா ஆடணும்னா முதல்ல வீரர்கள் எல்லாம் ஒற்றுமையா இணைஞ்சு இருக்கணும். எல்லாரையும் சேர்க்கத் தான் இந்தியா சிமெண்ட்ஸ் இருக்கே, செங்கலை சேக்கற சிமென்ட் இந்த வைரங்களையும் சேர்த்து இன்னிக்கு வெற்றி வாகை சூடியிருக்கு, வாழ்த்துக்கள்

"ஹ்ம்ம்.. வாங்கற காசுக்கு ஏதோ நம்மளப் பத்தியும் நாலு வார்த்தை பேசியிருக்கான், இவனுக்கு CSK வுல எதாச்சும் போஸ்ட் குடுத்து வெச்சிக்கணும்"

வடிவேலு,

"நான் என்னங்க புதுசா சொல்லப் போறேன், வாலி சொன்னாரு, டோனி ஐயா கிட்ட டியூஷன் கத்துக்கணும்னு. கருப்பு MGRனு சொல்லிக்கிட்டு ஒருத்தன் திரியறான். அவன் டோனி கிட்ட டியூஷன் கத்துக்கணும். அவ்ளோதாங்க, வரேங்க. அப்புறம் இன்னொரு விஷயம், CSKவுக்கு ஆளுங்க வேணும்னா சொல்லுங்க, என் வீட்டுல கல் எறிஞ்ச பசங்க நல்ல குறி பார்த்து அடிப்பாங்க. அவங்கள சேர்த்துக்குங்க.

விவேக்,

கலைஞரைப் பார்த்து, "ஹாய் dude," கலைஞர் சிரிக்கிறார். பிறகு ஆடியன்ஸைப் பார்த்து "என்ன பாக்கறீங்க, எல்லாரும் அவரை இளைஞர்னு சொல்றீங்க, அப்போ அவரை அப்படித்தானே கூப்பிடணும்?, திரு ஸ்ரீனிவாசன் அவர்களைப் பார்த்தால் பஜன்லால் சேட் போலிருக்கிறார். அவரைப் பார்த்தாலே எதாச்சும் அடகு வைக்கணும்னு தோணுது. இந்த மாதிரி ஒரு நல்ல டீம் உருவாக்கியதற்கு எங்கள் இதயங்களைத் தான் அடகு வைக்க வேண்டும்.

எல்லா வீரர்களையும் குறிப்பிடணும்னா இந்த விழா பத்தாது. ஏன்னா, எல்லாரும் அவ்ளோ சிறப்பா விளையாடினாங்க. அதுலயும் மார்கல் சேப்பாக்கத்தில அடிச்ச சிக்ஸர் பீச்ல பஜ்ஜி போட வெச்சிருந்த எண்ணைச் சட்டியில விழுந்ததா பேசிக்கறாங்க. இன்னும் நிறைய பேர் பேச வேண்டியிருக்கு, அதனால நான் விடை பெறுகிறேன்.

Now Kamal comes to the stage.

சபையோருக்கு வணக்கம். எப்படி தலைவருடனான பழக்கம் எனக்கு தமிழைக் கற்றுத் தந்ததோ, அது போல ஸ்ரீகாந்துடனான பழக்கம் எனக்கு ஓரளவு கிரிக்கெட்டையும் கற்றுத் தந்தது. நானும் அவரும் ஆழ்வார்பேட்டை தெருக்களில் கிரிக்கெட் விளையாடிய காலங்கள் மறக்க முடியாதவை.

aniruth to ashwin, “பாவம்டா எங்க அப்பா, கிரிக்கெட் பத்தி அவருக்கே கிளாஸ் எடுத்து மொக்கை போட்டுட்டு போவான். ஏதோ அவன் பொண்ணு சுமார் பிகரா இருந்ததாலே கம்முனு இருந்தேன்"

ஆர்ட் பிலிம் போல இருந்த கிரிக்கெட், IPL மூலமாக ஜனரஞ்சகமாக ஆயிருக்கிறது. புதிய முகங்களுக்கு முகவரி கிடைத்துள்ளது. CSKவுக்கு தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர்கள், டைரக்டர் எல்லாமே நன்றாக அமைந்திருக்கிறது." சில்வர் ஜுபிலி கொண்டாட வாழ்த்துக்கள்.

Srinivasan, "பாவம், இவர் படத்துக்குத் தான் யாரும் சரியா செட் ஆக மாட்டேங்கறாங்க"

Superstar comes:

வணக்கம், நான் ரொம்ப பேச விரும்பலை, ஒரு சின்ன கதை சொல்லிட்டு போயிடறேன். ஒரு பூனை வலையில மாட்டிகிச்சாம். அப்போ ஒரு எலி அங்க வந்து "நான் உன்னை காப்பத்தறேன், ஆனா அந்த மரத்து மேல ஒரு ஆந்தை இருக்கு, அது என்னையே பாக்குது. அதனிடம் இருந்து நீ என்னைக் காப்பாத்தணும்" அப்படின்னு சொல்லிச்சாம். பூனையும் சரின்னு சொல்லிச்சு. எலி வலையை கடிச்சி பிக்க ஆரம்பிச்சுது. பூனையும் ஆந்தையை விரட்டவே, அது பறந்து போயிடுச்சு. பாதி வலையை பிச்ச எலி மிச்ச வலையை பிய்க்காம விட்டுடுச்சு. பூனை உடனே "நம்பிக்கைத் துரோகி, இப்படி ஏன் பண்றே" அதுக்கு எலி சொல்லிச்சாம் " அந்த வேடன் வரும்போது தான் மீதி வலையை பிய்ப்பேன். இல்லேன்னா நீ என்னை அடிச்சு சாப்டுடுவே, வேடன் வந்துட்டா நீ அவனுக்கு பயந்து ஓடுவே, என்னை விட்டுடுவே" - அந்த எலிக்கே அவ்ளோ சாதுர்யம்னா நம்ம தலைவர் சிங்கம், அவருக்கு எவ்ளோ இருக்கும். CSK கேப்டனும் ஒரு சிங்கம் தான். So, நீங்க இன்னும் நிறைய ஜெயிக்கணும்னு அந்த பாபாஜி கிட்ட வேண்டிகிட்டு, வாழ்த்தறேன், வணக்கம்.

("தலைவா, சீக்கிரம் treatment முடிச்சிட்டு வாங்க, இல்லேன்னா உங்களுக்கு இங்க திவசமே பண்ணிடுவாங்க சில பேர்")

இப்பொழுது தலைவர் பேச வேண்டும். அதற்கு முன்னாள் ஸ்ரீனிவாசன் அவருக்கு பொன்னாடையும் கலைஞர் பேட் பிடித்திருப்பது போன்ற தங்க உருவ சிலையையும் பரிசாக அளிக்கிறார் (tournament பரிசுத் தொகை இப்படியே போயிடும் போலிருக்கே). தலைவர் பேச ஆரம்பிக்கிறார்:

உடன்பிறப்பே,

Hussy to அஷ்வின், "what does that mean ?"

அஷ்வின், "he is addressing you as his brother"

What?

"cool buddy, its very common here, he will address even your son as his brother, we are used to it".

எனக்கும் ஸ்ரீனிவாசனுக்கும் உண்டான நட்பு நாடறியும். எங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகள் வெவ்வேறாக இருந்தாலும் விளையாட்டு என்று வரும்போது நாங்கள் என்றுமே இணைந்து செயல்பட்டுள்ளோம். , மைதானமும் அதற்கேற்றவாறு எனது தொகுதியிலேயே இருக்கிறது.

CSK இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருப்பதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன். அதிலும் இறுதி ஆட்டத்தில் ஹஸ்ஸியும் விஜய்யும் பொன்னர் சங்கர் போல எதிரிகளை சூறையாடிய விதம் பாராட்டுதற்குரியது ஒரு மொழிக்கு அணி என்பது எவ்வளவு முக்கியமோ அது போல விளையாட்டுக்கும் அணி மிகவும் முக்கியம். CSK ஒன்று தான் ஓரணியாக நின்று விளையாடினர், ஏனையோர் வெறும் பணியாக நினைத்து தோல்வியைத் தழுவினர்.

ஒரு சில வீரர்களைக் குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்:

ஹஸ்ஸி - எப்படி ஹாரிஸ் ஜெயராஜின் இசை எல்லாப் படத்திலும் ஒரே மாதிரி இருக்கிறதோ, அது போன்று இவரது ஆட்டமும் எல்லா மேட்ச்களிலும் ஒரே மாதிரி இருக்கிறது.

பத்ரிநாத் - CSKவின் உயிர் காக்கும் திட்டம். 10 ரன்னுக்கு 8 விக்கெட் போனால் கூட 108 போல விரைந்து வந்து காப்பவர்.

அஷ்வின் - பெயரிலேயே "Win" வைத்துள்ளார். வேறென்ன சொல்ல? ஒரு சூறாவளியை தன் சுழலில் சிக்க வைத்தவர்.

ராய்னா - தோனியின் தளபதி

மோர்கல் - CSKவின் போர்வாள்

சமீப காலங்களில் நான் படித்து வரும் ஒரு விவாதம் - country or club ? வீரர்கள் நாட்டுக்கு முக்கியத்துவம் தர வேண்டுமா அல்லது IPL அணிக்கு முக்கியத்துவம் தர வேண்டுமா என்பது தான் அது. சுருங்கச் சொன்னால் "கட்சியா, ஆட்சியா?" என்று கேட்பது போல. ஆட்சிக்கு வர கட்சி முக்கியம். ஆட்சிக்கு வந்தால் தான் கட்சி மேம்படும்.

அதே போல, கிரிக்கெட் வாரியத்தின் மீதும் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விளையாடுவதால் வீரர்கள் காயம் அடைகிறார்கள் என்று. இன்றைய சூழ்நிலையில் எல்லோரும் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். மென்பொருள் நிறுவனங்களில் 14 -15 மணி நேரம் உழைக்கின்றனர். பாட்டாளி வர்க்கம் கால் கடுக்க நின்று வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்கின்றனர். விளையாட்டு விளையாட்டாக இருந்த காலம் மலையேறி விட்டது. அவர்களும் அலுவலகம் செல்வது போல் மைதானங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

ஊதியம் அல்லது ஊக்கத்தொகையில் குறைபாடு இருப்பின் அவர்கள் குறை கூறவதை ஏற்கலாம். அப்படியும் இல்லை. இது போதாதென்று இவர்கள் எங்கு சென்றாலும் குடும்பத்தையும் கூடவே அழைத்துச் செல்கின்றனர். இப்படி இருக்கும் போது வாரியத்தை குறை சொல்வது ஏற்புடையதாகாது.

இந்த விழாவிற்கு வரும் வழியில் நண்பர் வீரமணியுடன் உரையாடினேன். அப்போது அவர் சொன்னார் " CSKவில் வெறும் சென்னையைச் சேர்ந்தவர்களே உள்ளனர். மற்ற மாவட்டதினற்கும் வாய்ப்பு வழங்க ஆவன செய்ய வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார். அந்த வகையில் TPL (தமிழ்நாடு பிரீமியர் லீக்) இந்த ஆண்டிலேயே அறிமுகப் படுத்தப்படும். சென்னை, மதுரை, திருச்சி, கோயமுத்தூர், நெல்லை மற்றும் பாண்டிச்சேரி ஆகிய ஆறு மண்டலங்கள் அதில் இடம்பெறும். இதில் தலை சிறந்து விளையாடும் வீரர்கள் புள்ளிகள் அடிப்படையில் CSK வில் நுழையும் பொன்னான வாய்ப்பினை பெறுவார்கள். தாழ்ந்த மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு உண்டு என்பதை நான் தனியாக சொல்ல வேண்டியதில்லை.

ஸ்ரீனிவாசன் "போச்சுடா, முதலுக்கே மோசம், கொஞ்சம் சம்பாதிக்க விடமாட்டாங்களே, உடனே குடும்பமும் கழகமும் பங்குக்கு வந்திடுவாங்க, யப்பா தோனி, நீ எதுக்கும் அழகிரி கிட்ட சொல்லி மதுரையில ஒரு பாஸ்போர்ட் எடுத்து வெச்சிக்க, இல்லேன்னா நீ தமிழனே இல்லேன்னு உன்னை தூக்கிடுவாங்க"

தோனி, "சார் என் பணம்?"

"போடாங்கொய்யா,, சென்னை சூப்பர் கிங்க்ஸ் சென்னை சூப்பர் கழகமா மாறிக்கிட்டு வருது, நான் போய் முதல்ல சரத் பவாரை பார்க்கணும்"

அதுக்கு ஏன் சார் டென்ஷன் ஆவுறீங்க? கூல்.

நீ கேப்டன் கூல் தான், ஒத்துக்கறேன், அதுக்காக இவ்ளோ கூலா உன்னால எப்படி இருக்க முடியுது?'

"இந்த விழா ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஸ்டாலினைப் பார்த்து பேசி கரெக்ட் பண்ணிட்டேன். எனக்கு இளைஞரணி செயலாளர் பதவியும் உங்களுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் பதவியும் தரேன்னு சொல்லிட்டார்."

அது சரி, மத்த ப்ளேயர்ஸை எப்படி டீல் பண்ணப் போறே?

"என்ன சார், அதெல்லாம் யோசிக்கமட்டேனா? நம்ம ஆளுங்க பாதிபேருக்கு வெஸ்ட் இண்டீஸ் டூர்ல இடம் குடுத்துட்டேன். மிச்சம் இருக்கறது ஆஸ்திரேலியன் ஆளுங்க தான். அவங்களுக்கு இதெல்லாம் சப்பை மேட்டர். எங்க துட்டு குடுத்தாலும் போயிடுவாங்க"


"யப்பா மேல்மாடி, நீ கிரௌன்ட்ல தான் புத்திசாலின்னு நினைச்சேன், நீ நிஜமாவே மூளைக்காரன் தான்"


Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...