Friday, July 12, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 12


"பாய், திவாலி ஆகயா" என்று கூவிக்கொண்டே வந்தான் ஹைதர் அலி.

"என்ன சொல்றே?"என்று கேட்டவாறு பைப்பில் இருந்த புகையிலையை பற்ற வைத்தான் டேவிட் ஆபிரகாம். இந்தியாவில் நடக்கும் விதவிதமான பண மோசடிகள், சூதாட்டம், ஆட்கடத்தல், போதை மருந்து கடத்தல் போன்ற அனைத்து வித குற்றங்களுக்கும் ஒரே மூல காரணமாக கருதப்படுபவன் டேவிட். பல சமயங்களில் கேடு கெட்ட இந்திய அரசியல்வாதிகளுக்குக் கை கொடுக்கும் பிராண்டட் கிரிமினல். கடவுளைக் கூட கண்டுபிடித்து விடலாம். இவனை இன்னும் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். மீடியாக்காரர்கள் பாடு தான் திண்டாட்டம். இவனைப் பற்றி எதாவது செய்தி போட வேண்டுமென்றால் ஒரு லேட்டஸ்ட் போட்டோ கூட கிடையாது. பாவம், 20 வருடத்துக்கு முந்தி எடுத்த போட்டோவை மாற்றி மாற்றி காண்பித்து ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

"நிஜமாத்தான் பாய், புதுசா பாரத் பிரீமியர் லீக்னு ஒரு கிரிக்கெட் போட்டி நடக்கப் போவுது. 20-20 பார்மாட்ல"

"அதுக்கு?"

"நாமளும் வழக்கம்போல கலந்துக்க வேண்டியது தான்"

"நமக்கென்ன லாபம்?"

"என்னண்ணே புதுசா கேக்கறே? ஒவ்வொரு தடவையும் அவங்களை விட நாம தானே அதிகமா சம்பாதிக்கறோம்"

"அட போய்யா,"

"இது தனியார் போட்டிண்ணே, பெரிசா கட்டுப்பாடுன்னு ஒண்ணும் கிடையாது"

"அங்க தான்யா போரடிக்கும். த்ரில் இருக்காது பாரு"

"ஏண்ணே?"

"த்ரில் எவ்ளோ அதிகமா இருக்கோ அவ்ளோ அதிகமா நாம சம்பாதிக்கலாம். அதுவுமில்லாம இதுல முதலாளிங்களே பந்தயம் கட்டி சம்பாதிக்க பார்ப்பானுங்க. நமக்கு வேலை இருக்காது"

"இருந்தாலும்.."

"சொல்றதை கேளு. இப்போ தான் 2 வேர்ல்ட் கப்ல ஏகப்பட்ட பிக்சிங் பண்ணியிருக்கோம். போலிஸ் இந்நேரம் நாம பண்ணின தொலைபேசி அழைப்புகளை பிரிச்சி பேன் பார்த்துக்கிட்டிருப்பாங்க. இந்நேரத்தில் நாம மறுபடியும் ஆரம்பிச்சோம்னா வீண் பிரச்சினை"

"நம்மளை யாருண்ணே பிடிக்கப் போறாங்க?"

"அப்படி நினைக்கவே கூடாது தம்பி. எவ்வளவு தான் கோடிகளில் சம்பாதிச்சாலும் பவர் இருந்தாலும் நாம என்னிக்குமே திருடங்க தான்"

"சரி, அப்போ குருஜி கிட்ட வேண்டாம்னு சொல்லிடவா?"

"சொல்லிடு சொல்லிடு"என்று டேவிட் கூறும்பொழுது தொலைபேசி அழைத்தது. அழைக்கும் நபர் பெயர் கண்டவுடன் வியப்படைந்த டேவிட் ஹைதரை காத்திருக்குமாறு சைகை செய்தான்.

*********************************************************************************

"மாமாஜி, எல்லாம் பக்காவா ரெடி பண்ணியாச்சு" என்று பூரிப்புடன் கூறினான் ஸ்வராஜ்.

"எதைச் சொல்றே?"

"நீங்க எதை கேட்கறீங்க?"

"நான் டீமை கேட்டேன்"

"நான் பெட்டிங் பத்திக் கேட்கறீங்களோன்னு நினைச்சேன்"

"அதில தான் நீ குறியா இருக்கியே, பக்காவாத் தான் பண்ணியிருப்பே'

"பின்னே என்ன மாமாஜி. எப்படியும் எவனோ ஒருத்தன் பெட்டிங்கோ பிக்சிங்கோ பண்ணி சம்பாதிக்கப் போறான். அதை நாமளே செஞ்சா என்ன? உங்களுக்குத் தெரியாததா?"

"அதெல்லாம் சரி தான். ஆனா இது சரியில்லை"

"சரி தப்பு பற்றி யோசிக்கற கட்டத்தை நான் தாண்டியாச்சு. இனிமே ஆக்ஷன் தான்"

"எல்லாம் சரி, ஜாக்கி யாரு?"  (ஜாக்கி என்பது பெட்டிங் ஒருங்கிணைப்பாளருக்கான சங்கேத வார்த்தை)

"ராதே சிங்"

*********************************************************************************

"அய்யய்யோ என்னால முடியாது. என்னை வம்புல மாட்டி விட்டுடாதீங்க" என்று மிரண்ட படியே விஸ்கியை ஒரு மிடறு விழுங்கினான் ரகுநாத்.

"எதுக்குய்யா பயப்படறே? கிரிக்கெட்ல இதெல்லாம் சகஜமப்பா" என்று அவன் க்ளாசில் இன்னும் கொஞ்சம் விஸ்கியை ஊற்றினான் பாலா. கூடவே கதிர்வேலும் இருந்தான்.

"என் மாமனாருக்குத் தெரிஞ்சா அவ்ளோ தான்"

"அங்க தான் உனக்கு எந்த மரியாதையும் கிடையாதே, அப்புறம் எதுக்கு நடுக்கம்?"

"ஏற்கனவே உதாவக்கரை மாப்பிள்ளைன்னு ஊர் முழுக்க சொல்லிக்கிட்டுத் திரியறாரு. இருந்து இருந்து இப்போ தான் என்னை நம்பி ஒரு பொறுப்பை குடுத்திருக்கார். இப்ப போய்..."

"காற்றுள்ள போதே தூற்றிக் கொள் மச்சி"

கதிர்வேலு, "ஆமாம் மச்சி, நீ ஒரு கருவியா மட்டும் இருந்தாப் போதும். மத்ததை நாங்க பார்த்துக்கறோம். உன் பெயர் வெளியே தெரியாது"

"எதாவது ஏடாகூடமானா என் பொண்டாட்டி மூஞ்சியில் நான் எப்படி முழிப்பேன்?"

"நீயாச்சும் உன் பொண்டாட்டி மூஞ்சியில் முழிக்கறதைப் பற்றி யோசிக்கறே. நாங்க பொண்டாட்டி மூஞ்சியில் முழிச்சே பல நாள் ஆச்சு. வெட்டி ஆபிசர் போறார் பாருன்னு வெளிப்படையா கிண்டல் பண்றாங்க எங்க வீட்ல. இதுல எதாச்சும் சம்பாதிச்சு கொஞ்சம் கௌரவத்தைத் தேத்திக்குவோம்"

"அதுக்காக என்னை பலியாடாக்கப் பார்க்கறீங்களா?"

"சரிப்பா, உனக்குப் பிடிக்கலைன்னா விட்டுடு, ஏதோ நண்பர்களுக்கு உதவி பண்ணுவேன்னு நினைச்சோம்"

"இது உதவியில்லை, துரோகம்"

"அப்போ நீ பொறுப்பெடுத்திருக்கியே, அந்த டீம்ல எங்களுக்கு எதாச்சும் வேலை போட்டுத் தர்றியா? நாங்க வேணும்னா வீரர்களோட பேட்டிங் கிட்டைக் கூட தூக்கத் தயார்"

"இது நியாயமான உதவி. நீங்க அதெல்லாம் ஒண்ணும் தூக்க வேணாம். வேற வேலை போட்டுத் தரேன்"

பாலாவும் கதிரும் ஒருவரையொருவர் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தனர்

*********************************************************************************

"தலைவரே, இன்னும் போட்டி ஆரம்பிக்கவே இல்லை, அதுக்குள்ளே தொலைபேசி அழைப்புகள் பறக்குது" என்றான் விக்ரம்

"அப்படியா?"

"அதுவும் சென்னை, ஜெய்ப்பூர், மும்பை - இந்த மூணு லொகேஷன்கள் தான் ஹாட்"

"இரு இரு. போட்டி ஆரம்பிக்கட்டும். கல்கத்தா, ராஞ்சி, சண்டிகர்னு லிஸ்ட் நீளும்"

"நீங்க ஏன் இதை தடுக்கக் கூடாது?"

"தடுக்கலாம். ஆனால் அதுக்கு நான் உயிரோட இருக்கணுமே - வேர்ல்ட் கப் ஆடப்போன இடத்தில அந்த கோச் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தானே, எப்படி? யாரால? எதாவது தெரிஞ்சுதா? மலர் வளையம் வைச்சது தான் மிச்சம்"

வியப்போடும் சற்று திகிலோடும் தலைவரை நோக்கினான் விக்ரம்.

"கிரிக்கெட்ல பெட்டிங் பண்றவங்க எல்லாருமே ஒரு கருவிங்க தான். அதுக்கு மூலம் எதாவது ஒரு அரசியல் கட்சி தான் இருக்கும். ஏன்னா அவங்களுக்கு சம்பாதிக்கறதுக்கு இதை விட எளிதான வழி கிடையவே கிடையாது. நம்ம கிரிக்கெட் குழு ஆரம்பிச்சு இவ்ளோ வருஷம் ஆவுது, இன்னும் அது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. ஏன்? - புரிஞ்சுக்க"

"அப்புறம் எங்களை எதுக்கு தொலைபேசியை ஒட்டுக் கேட்கச் சொல்றீங்க?" நீங்க பாட்டுக்கு சம்பாதிக்க வேண்டியது தானே?"

"அங்க தான் ட்விஸ்ட் இருக்கு. எப்பவுமே அடுத்தவன் நம்ம கட்டுப்பாட்டில் இருக்கணும். நம்மளை விட அதிகம் சம்பாதிக்கக் கூடாது. அவனை அப்பப்ப மிரட்டறதுக்கு ஒரு துருப்புச் சீட்டு வேண்டாமா? அதுக்குத் தான்"

"என்னவோ போங்க. எல்லாரும் சேர்ந்து எங்க உயிரை வாங்கறீங்க - எல்லாரும் கருவின்னு சொல்றீங்க, அப்போ நீங்களும்..."

"ஆமாம். வேற சாய்ஸ் கிடையாது. இல்லேன்னா ராஜினாமா பண்ணிட்டுப் போக வேண்டியது தான். வேற எவனாச்சும் சம்பாதிப்பான்.

"அப்போ கிரிக்கெட் விளையாடறதுக்காக இந்த குழு அமைக்கலியா?"

"ஆங், அதுவும் அப்பப்ப நடக்கும்"

வெறுப்பான புன்னைகையை உதிர்த்தான் விக்ரம்.

"இது ஏதோ மும்பை போலிஸ் மட்டும் செய்யற வேலைன்னு நினைக்காதே. டெல்லி போலீசும் இதுல முழுக் கவனம் செலுத்தறாங்க"

"சரி சார், நான் போனை வைக்கறேன். இன்னிக்கு உங்க கிட்டேர்ந்து நிறைய தெரிஞ்சிக்கிட்டேன். நன்றி"

"அப்படியே அதையெல்லாம் மறந்துடு. ஞாபகம் வைச்சுக்காதே. உனக்குத் தான் ஆபத்து"

*********************************************************************************

போன் பேசி முடித்த டேவிட் நீண்ட பெருமூச்சு விட்டான். பைப்பில் புகையிலை சாம்பலாகியிருந்தது.

"யாருண்ணே?"

"எல்லாம் நம்ம பாடிகார்ட் தான். புதுசா ஒரு தீவிரவாதத் தாக்குதல் திட்டம் போட்டிருக்காங்க"

"எங்க?"

"கழுதை கெட்டா குட்டிச் சுவர். வழக்கம் போல மும்பையில் தான்"

"அதுக்கு?"

"நாம பணம் ஏற்பாடு பண்ணித் தரணுமாம்"

"சரியான பிச்சைக்கார பசங்க. இன்னும் எவ்ளோ தான் குடுக்கறது இந்த ஆளுக்கு? முதல்ல இவனைப் போடணும்"

"அவசரப்படாதே தம்பி. வேற எங்க போனாலும் கண்டவுடன் சுட்டுடுவாங்க. இங்க தான் நாம பாதுகாப்பா இருக்க முடியும்"

"அப்போ இந்தியாவில் போய் சரணடைஞ்சுடுங்க. கோர்ட் கேசுன்னு எப்படியும் 5 வருஷம் இழுத்தடிப்பாங்க. போலிஸ் பாதுகாப்பு, மீடியா கவரேஜ்னு ஜாலியா இருக்கலாம்"

"அப்புறம் திடுதிப்புன்னு ஒரு நாள் நம்மளை கொன்னுட்டு கைதிகளுக்குள் சண்டைன்னு சொல்லி கேசை மூடிடுவாங்க"

ஹைதர் திடுக்கிட்டான் "சரி, இப்போ என்ன பண்ணப் போறீங்க?"

டேவிட் யோசித்துக்கொண்டே மேசையில் இருந்த பேனாவை சுற்ற ஆரம்பித்தான். ஹைதர் முகம் மலர்ந்தது.

டேவிட், "லெட் த கேம்ஸ் பிகின்"




ஆட்டம் தொடரும்....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...