Sunday, July 28, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 13




நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா அல்லது லாஸ் வேகாசுககு வந்துவிட்டோமா என்ற ஐய்யத்தை ஏற்படுத்திவிட்டது அஜய் செல்லையாவிற்குச் சொந்தமான அந்த பண்ணை வீடு. அங்கே தான் பிரீமியர் லீக் அணிகளின் முதல் அறிமுக பார்ட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது . அணி வீரர்கள், முதலாளிகள், அவர்களின் நண்பர்கள், நலம் விரும்பிகள் என இந்தியாவின் முக்கியப் புள்ளிகள் அனைவரும் அங்கே ஆஜராகியிருந்தனர். அரை ஆடையுடன் ஆங்கிலப் பெண்கள், குறை ஆடையுடன் இந்தியப் பெண்கள், சீட்டுக் கட்டு முதற்கொண்டு பல வகையான சூதாட்ட விளையாட்டுகள், பல வண்ணங்களில், பல விதங்களில் உற்சாக பானங்கள் (பானி பூரிக்குள் வோட்கா) - மது, மாது, சூது என முப்பெரும் விஷயங்கள் ஐக்கியமாகியிருந்தது அங்கே.

பொறுப்பாளர் என்ற முறையில் லலித் எல்லோரிடமும் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தான். அவ்வப்பொழுது ஆங்காங்கே நின்று கொண்டிருந்த வெள்ளைப் பெண்களிடமும் கொஞ்சிக் குலாவினான்.

அங்கேயிருந்த பல சொகுசு சோபாக்கள் ஒன்றில் ரகுவும் அவன் மனைவியும் அமர்ந்திருந்தனர். மனைவி அருகில் இருந்தாலும் ரகுவின் பார்வை முழுக்க எதிர்த் திசையில் அமர்ந்திருந்த மொஹிந்தரின் மீதும் அவனை உரசிக் கொண்டிருந்த லாஜ்வந்தி ராயின் மீதும் தான் இருந்தது. லாஜ்வந்தி, தமிழ் மற்றும் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகை. மங்களூர் ராய்க்கும் பெங்காலி ராய்க்கும் உள்ள குழப்பத்தை சரியாகப் பயன்படுத்தி வரும் நடிகை. இன்னமும் நட்சத்திர நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடி வருகிறார். மொஹிந்தரின் குடும்ப நண்பி மற்றும் கேரளா கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் பெண் தோழி என்று தொடர்புகள் இருப்பதால் விக்ரம் இவளை அணுகி உளவு பார்க்குமாறு அனுப்பியுள்ளான். ஆனால் அவள் மொஹிந்தருக்கு துரோகம் செய்வாளா என்பது கேள்விக்குறி.

மொஹிந்தர் முழு ஜீன்ஸ் அணிந்திருந்தான். லாஜ்வந்தியும் ஜீன்ஸ் அணிந்திருந்தாள் - 70% தள்ளுபடி செய்து. அவனுடன் தொடையோடு தொடை உரசி அவன் தோள் மேல் கை போட்டு உட்கார்ந்திருந்தாள். மொஹிந்தர் மொபைலில் எதையோ காட்ட அதை என்னவென்று கூட பார்க்காமல் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள். இவை அனைத்தும் எதிரே இருந்த ரகுவை உணர்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்தின. அவளை மொஹிந்தரின் தோழியாகப் பார்ப்பதா, அல்லது அவளின் இளமையை ரசிப்பதா, அல்லது வன்மையாகக் கண்டிப்பதா என்று மிகவும் குழம்பியதில் ஒரே மூச்சில் கையிலிருந்த விஸ்கியை குடித்தான். பாருவோ படு கூலாக அருகே இருந்த வருணிடம் வியாபாரம் பேசிக் கொண்டிருந்தாள். இவை எதுவுமே அவளை பாதிக்கவில்லை.

பிரபல பேண்ட் வாத்யக் குழுவினர் காது கிழியும் அளவிற்கு இசையின் ஒலியைப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள். 20 பேர் நிற்கக் கூடிய நடன மேடையில் 70 பேர் நின்று ஆடிக் கொண்டிருந்தனர். கோபியர் கூட்டத்துக்கு நடுவே கண்ணனைப் போல ஹர்கிரத்தும், ப்ரித்வியும் பெண்களுக்கு மத்தியில் நடுநாயகமாக நடனமாடிக் கொண்டிருந்தனர்.

இவர்களைப் போலவே மற்ற அணியினரும் முதலாளி மற்றும் கேப்டன் சமேதமாக அங்காங்கே அமர்ந்திருக்க ராதேவும் பாலாவும் ஆளுக்கொரு பியர் பாட்டிலை கையில் வைத்துக் கொண்டு ஒரு ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

பாலா, "என்னய்யா எல்லாம் ஒழுங்கா வர்க் அவுட் ஆகும்ல? உன்னை நம்பித்தான் இறங்கியிருக்கோம்"

ராதே, "சின்தா மத் கரோ பாய், நல்லபடியா வரும். என்ன, இந்த மொஹிந்தர் பய ஒத்துழைக்க மாட்டான். என் டீலிங் அவனுக்குத் தெரியும். போட்டுக் கொடுக்காம இருக்கணும்."

பாலா, "அது சரி, இந்த பிக்சிங் மேட்டர்ல துபாய் டேவிடுக்கும் தொடர்பு உண்டுன்னு அடிக்கடி சொல்றாங்களே? உண்மையா?

"பின்னே? நடத்தறதே அவர் தானே? இல்லேன்னா இங்கே இருக்கற அரசியல்வாதிகள் ஒருத்தருக்கொருத்தர் போட்டுக் கொடுத்து இந்நேரம் கதையை முடிச்சிருப்பாங்களே"

"நீ அவர் கூட நேரடியா பேசியிருக்கியா?"

"அதெல்லாம் முடியாது. சின்னத்தம்பின்னு ஒருத்தன் இருக்கான். அப்புறம் குருஜின்னு ஒருத்தர் இருக்காரு. அவங்க மூலமாத் தான் பேச முடியும்"

இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது ஸ்ரீகாந்த் அங்கே வந்தான் "என்ன ரெண்டு பேரும் ஓரமா இருக்கீங்க? அங்கே பாருங்கப்பா, பொண்ணுங்க எல்லாம் என்னமா இருக்குங்க. அதையெல்லாம் ரசிக்கறதை விட்டுட்டு.."

பாலா, "வாங்க சேட்டா"

ராதே, "வேண்டாம்பா, இந்த பொம்பளை ஷோக்குல தான் சமீபத்துல போலிஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டேன் போதை ஏறிடுச்சுன்னா என்ன பண்றோம்னே தெரிய மாட்டேங்குது"

பாலா, "சேட்டா, நீங்க இங்க இருக்கீங்க, உங்க ஆளு எங்க?"

ராதே, "அவ தான் மொஹிந்தரை விட்டு நகர மாட்டேங்கறாளே"

ஸ்ரீகாந்த் "அவங்க ரெண்டும் பேரும் குடும்ப நண்பர்கள். சின்ன வயசு பழக்கம்"

பாலா, "பார்த்துங்க, மொஹிந்தர் ஹாட் ப்ராப்பர்ட்டி. கிராமத்துப் பெண்கள் எல்லாம் அவனை புருஷன் வேணும்னு நேர்ந்துக்கிட்டிருக்காங்க. மேடம் அந்த பக்கம் சாஞ்சுடப் போறாங்க"

ஸ்ரீகாந்த், "அதெல்லாம் போக மாட்டா, எங்க மாமா மூலமா அவளுக்கு 2-3 மலையாள சினிமாவுல சான்ஸ் வாங்கித் தர்றதா சொல்லியிருக்கேன் ஸோ, அது வரைக்கும் என் கூடத் தான் இருப்பா"

ராதே, "ரொம்ப சின்சியரா லவ் பண்றீங்களோ?'

"அதெல்லாம் ஒரு எழவும் கிடையாது. இப்போதைக்கு ப்ரீபெயிட், போகப் போக எப்படின்னு தெரியல. ராதே, உன்கிட்டே தனியா ஒரு விஷயம் பேசணுமே?"

பாலா, "பிக்சிங் பத்தின்னா இங்கேயே பேசுங்க, ஏன்னா நாங்களும் கேம்ல இருக்கோம்"

சற்று அதிர்ச்சியடைந்தாலும் "இந்த வருஷம் யார் மேல பைசா அதிகம் கட்டியிருக்காங்க?"

ராதே, "ஜெய்ப்பூர் மற்றும் சென்னை தான். ஏன்னா இரண்டு டீம்லயும் அரசியல் மற்றும் கிரிக்கெட் குழுவோட மறைமுக சப்போர்ட் இருக்கு. இவங்க ரெண்டு பேர்ல ஒரு டீம் தான் கப் ஜெயிக்கும்னு நம்பறாங்க"

பாலா, "சேட்டா, உங்க டீம் எப்படி இருக்கு?"

"கொஞ்சம் டல்லாத்தான் இருக்கு. வெள்ளைக்கார பசங்க இந்த ப்ரீத்தா மேலேயே ஒரு கண்ணா இருக்காங்க. இதுவும் எந்நேரமும் போய் அவங்க முன்னாடி வழிஞ்சிக்கிட்டே இருக்கு.

"உன் முன்னாடி வழிஞ்சிருந்தா குஜாலாயிருப்பே, இல்லை?'

"எனக்கு அக்கா மாதிரிங்க.."

"ஆனாலும் பக்காவாத்தானே இருக்கு."

"வாஸ்தவம் தான், போதாக்குறைக்கு இந்த ப்ரித்வி பய வேற"

"உனக்கு பொறாமையா இருக்கா?"

"அப்படின்னு இல்லை, நாமளும் தான் திறமைசாலி."

பாலா, "சேட்டா, போலர்ஸ் சினிமாவுல வர்ற காமெடியன்ஸ் மாதிரி. நல்லா பாராட்டுவாங்க, முக்கியத்துவம் குடுப்பாங்க, ஆனால் முன்னிலைப்படுத்த மாட்டாங்க"

ராதே, "சரியா சொன்னே, நீதான் சவுத் ஆப்ரிக்கா டூர்ல பல காமெடிகள் பண்ணினியே, அந்த மாதிரி எதாச்சும் பண்ணு"

பத்மநாபன் தங்களை நோக்கி வருவதை அறிந்த பாலா, "சரி சரி, பத்மா சார் வராரு, கொஞ்சம் அடக்கி வாசிங்க"

பத்மநாபன், "ஹெலோ பாய்ஸ், என்ன, பார்ட்டி என்ஜாய் பண்றீங்களா?"

பாலா, "இல்ல அங்கிள், லைட்டாத் தான்.."

பிறகு ராதேவைப் பார்த்து, "என்னப்பா, சௌக்கியமா? உங்க அப்பா, துபைல இருக்கற அண்ணன் தம்பி எல்லாரும் சௌக்கியமா?" என்றார்.

ராதேவுக்கு தூக்கி வாரிப் போட்டாலும் வெளியே காட்டாமல்"எல்லாரும் ஓகே சார்". பிறகு ராதே பாலாவையும் ஸ்ரீகாந்தையும் பார்த்து, "நீங்க பேசிக்கிட்டிருங்க, நான் பாத்ரூம் போயிட்டு வர்றேன்" என்று கூறி வேகமாக நகர்ந்தான்.

பத்மநாபன் இருவரையும் பார்த்து "அவன் யாருன்னு தெரியும்ல? ஜாக்கிரதையா இருங்க" என்று எச்சரித்தார்.

"ஓகே சார்" என்று கூறிவிட்டு ஸ்ரீகாந்த் லஜ்வந்தியை நோக்கிப் போனான்.

பாலா, "சார், அவன் யார்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு. அப்புறமும் ஏன் விட்டு வைச்சிருக்கீங்க?"

பத்மநாபன், "வீரர்கள் கிரிக்கெட் விளையாடறாங்க. நாங்க விளையாட்டை நடத்தறோம். ஆனால் உண்மையான விளையாட்டை நம்ம நாட்டு அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் தான் விளையாடறாங்க. இங்கேன்னு இல்ல, எல்லா ஊர்லேயும் இப்படித்தான். எந்த ஒரு புகழ்பெற்ற விளையாட்டா இருந்தாலும் அதுக்குப் பின்னாடி இந்த இரண்டும் இருக்கும். ஏன்னா மக்கள்கிட்டேர்ந்து காசு வர்றதினால எல்லாரும் அதில் மீன் பிடிக்கப் பார்ப்பாங்க - தங்க முட்டை போடற வாத்தை யாராச்சும் அறுப்பாங்களா?"

பாலா புரிந்த மாதிரி தலையாட்டினான்.

"இந்த விஷயம் ரகுவுக்குத் தெரியுமா?"

"தெரியும்.. ஆனா அவன் ஒத்துக்கலை"

சிறிது நேரம் யோசித்த பத்மநாபன் "ஜாக்கிரதை, பெயர் வெளிய வரக்கூடாது" என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார். பாலா, புரிந்தும் புரியாமலும் நின்றான்.



பார்ட்டி அதிகாலை 3 மணிக்கு முடிந்தது. முதலாளிகளும் கேப்டன்களும் சம்பிரதாய போட்டோக்களை எடுத்துக் கொண்டனர்.

ஷீலா, ப்ரீத்தா மற்றும் மகேஷின் மனைவி அனிதா ஆகியோர் தங்கள் டீம் கேப்டன்களிடம் குழைந்தது அவர்களின் கணவர்களுக்கு சற்றும் பிடிக்கவில்லை - இந்திய ஆண்கள் அப்படித்தான்!

அணியின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும், யார் யார் எதைச் செய்ய வேண்டுமென்று ஷாதிக்கிற்கு முழு நேர கிளாஸ் எடுத்து அவனுக்கு இரட்டைத் தலைவலியை வரவழைத்தான் கௌரவ்.

ஷயனும் கோகுலும் கிரிக்கெட்டைப் பற்றியும் புதிய புதிய டெக்னிக்குகளைப் பற்றியும் பேசிப்பேசி களைத்துப் போயினர்.

ஹர்கிரத்தும், ப்ரித்வியும் தங்கள் திறந்தவெளிக் காரில் 2-3 பெண்களுடன் ஹோட்டலை நோக்கி உற்சாகமாக விரைந்தனர்.

எல்லோரிடமும் வம்படித்த நரேந்தர் மொஹிந்தரிடம் மட்டும் சம்பிரதாயமாகப் பேசினான்.

பார்ட்டிக்கு வந்திருந்த தொழிலதிபர்களிடமும் அரசியல் புள்ளிகளிடமும் வலிந்து பேசி 10 கோடி ரூபாய்க்கு புதிய கான்ட்ராக்டைப் பிடித்தனர் மொஹிந்தரும் வருணும்.

குழந்தைகள் தூங்கிவிட்டதால் பார்ட்டி முடியுமுன்னரே ஹோட்டலுக்குத் திரும்பினர் ரகுவும் பாருவும். இனிமேல் லீக் பார்ட்டிகளுக்கு குடும்பத்துடன் வருவதில்லை என மனதுக்குள் உறுதிமொழி எடுத்துக் கொண்டான் ரகு.

லஜ்வந்தியும் ஸ்ரீகாந்தும் பார்ட்டி நடந்த இடத்திலேயே ஒரு சிறிய அறையில் "செட்டில்" ஆகியிருந்தனர்.

போட்டி ஆரம்பிக்கும் முன்னரே 65 கோடிக்கு மேல் அட்வான்ஸ் புக்கிங் நடந்திருப்பதாக விக்ரம் தலைவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தான்.

நாளை மறுநாள் போட்டி ஆரம்பம்.....



ஆட்டம் தொடரும்...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...