Monday, September 30, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 16

லலித் தலைவரின் அறைக்குள் நுழைந்தான். இவர் புதிய தலைவர். யார் பதவிக்கு வந்தாலும் தனது கைக்குள் போட்டுக் கொள்வது பத்மநாபனுக்குக் கை வந்த கலை. அதே போல் இவரையும் தன் வசம் வைத்திருந்தார்.

பத்மநாபன் தன் கையில் இருந்த பைலை பரபரப்புடன் மெதுவாகத் தட்டிக் கொண்டிருந்தார். தலைவர் தனது மூக்குக் கண்ணாடியைத் தாழ்த்தி மடிக் கணினியில் எதையோ உற்று நோக்கிக் கொண்டிருந்தார்.

லலித் உள்ளே நுழைந்தான். "என்ன சார் விஷயம்?, அவசரமா வரச் சொன்னீங்க?"

தலைவர் மூக்குக் கண்ணாடியைக் கழட்டி கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே பத்மநாபனுக்கு கண்களால் சைகை செய்தார். பத்மநாபன் தன் கையில் இருந்த பைலை லலித்தின் முன் நீட்டினார்.

"என்ன சார் இது?"

"பாருங்க, எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்ச விஷயம் தான்"

பைலைப் புரட்டிய லலித்திற்கு ஒரு வினாடி திக்கென்று இருந்தது. காரணம், அதில் அவன் தென்னாப்பிரிக்காவில் இருந்து லண்டனுக்கு மேற்கொண்ட பயண விபரங்கள், மில்லியன் கணக்கில் டாலர் மற்றும் யூரோக்களில் செய்யப் பட்ட பணப் பட்டுவாடா, லண்டன் மையப் பகுதியில் அவன் வாங்கிய பல கோடி மதிப்புள்ள இடம், பிரீமியர் லீகின் தொலைக்காட்சி உரிமையை சன்னி தொலைகாட்சிக்கு வழங்கியதில் பினாமி நிறுவனம் மூலம் சம்பாதித்தது, மேலும் ராஜஸ்தான் அணியில் பல்வேறு பெயர்களில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் என அவன் செய்த ஒட்டு மொத்த லஞ்ச லாவண்யத்தின் கண்ணாடியாக அந்த பைல் காட்சியளித்தது.

பத்மநாபன், "என்னய்யா இதெல்லாம்?"

லலித்திற்கு உள்ளுக்குள் வேர்த்தது. இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் "அதையே தான் நானும் கேட்கிறேன், என்ன இதெல்லாம்? இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது"

தலைவர், "பஸ்ல ப்ளேடு போடறவன் கூட இந்த பதில் தான் சொல்வான். என்கிட்டே கொஞ்சம் சிடிக்கள் இருக்கு. அதில் நீ லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இறங்கியது, நீ போன இடங்கள், சந்தித்த நபர்கள், கையெழுத்துப் போட்ட காகிதங்கள் சம்பந்தமான கண்காணிப்பு கேமிரா பதிவுகள் இருக்கு. பார்க்கறியா?

இனி மறைக்க ஒன்றுமில்லை என்று தெரிந்துகொண்ட லலித், "இப்போ என்ன சொல்றீங்க? வழக்கம் போல் உங்களுக்கு வேண்டியதை வாங்கிக்கோங்க. அவ்ளோ தானே?"

"அது அப்புறம், எங்ககிட்ட ஏன் முதலிலேயே சொல்லலை? இதெல்லாம் உள்துறை அமைச்சகம் எங்களுக்கு அனுப்பினது. இப்போ எங்களால உன்னை காப்பாத்தவும் முடியாது"

"இதெல்லாம் அந்த சசிதரன் வேலையாத்தான் இருக்கும். அவனோட கேரளா அணியை நான் இன்னும் முழுசா கிளியர் பண்ணலை. அந்தக் கடுப்புல பண்ணியிருக்கான்"

"கிளியர் பண்ண வேண்டியது தானே?"

"அது எப்படிங்க முடியும்?  இன்னும் முறையா குடுக்க வேண்டிய வங்கி ஆவணங்களே முழுசா வந்து சேரலை. அது வராம குடுக்கறது சரியில்லைங்க. அது மட்டுமில்லை, அந்த கேரளா அணி சரியான சொத்தை, மக்களைக் கவர்கிற மாதிரி பெரிய வீரர்கள் யாரும் கிடையாது. கொச்சினை தவிர்த்து வேற எங்க மேட்ச் ஆடினாலும் அதை ஒரு மதராசி டீமாத்தான் பார்ப்பாங்க. கிரௌண்ட் வருமானம் சுத்தமா வராது."

உனக்கெதுக்குய்யா அந்தக் கவலையெல்லாம்?

"எனக்கு நம்ம வருமானம் பற்றிய கவலை இருக்கு சார். ஒவ்வொரு பந்துக்கும் நான் லாபக் கணக்கு போட்டு வெச்சிருக்கேன்"

"அப்போ நீ கையெழுத்து போடலேன்னா அந்த டீம் விளையாட முடியாதா?"

"கண்டிப்பா, நான் லீக் கமிஷனர், எனக்கு எல்லா அதிகாரமும் இருக்கு"

"நீ சொல்ற லீகே நம்ம வாரியத்தின் சொத்து தான். அதை மறந்துடாதே"

"இத பாருங்க, முழு லாபத்தோட போட்டிகளை நடத்த வேண்டியது என் பொறுப்பு. அதுக்காக என்னோட உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது. கடந்த 3 வருஷத்துல என்னால வாரியத்துக்கு பல கோடி ரூபாய் லாபம். அந்த அளவுக்கு லாபகரமான ஒப்பந்தங்கள் போட்டிருக்கேன்"

பத்மநாபன்,"என்னய்யா, திடீர்னு ரொம்ப நல்லவன் மாதிரி பேசறே? அப்போ நீ செஞ்ச எதுவும் தப்பே இல்லைன்னு சொல்றியா? நீ முதலீடு பண்ணியிருக்கறது எல்லாம் வாரியத்துக்கு வர வேண்டிய பணம்"

"யார் தான் தப்பு பண்ணலை? உங்க மருமகன் கூடத்தான் சூதாடறான்"

"அப்போ நீ உன் தங்கச்சி பையன் கூட சேர்ந்துக்கிட்டு பண்றியே, அதுக்கென்ன பேரு? பெட்டிங், பிக்சிங் தனி நபர் சம்பந்தப்பட்டது. அதுல ஏமாந்து போறது ஜனங்க தான். ஆனா இது அப்படியில்ல"

லலித் கடுப்பாகி, "முடிவா என்ன தான் சொல்றீங்க? இவ்ளோ நாள் சம்பாதிச்சு குடுத்தேனே, அதுகெல்லாம் எனக்கு என்ன குடுத்தீங்க? நான் லண்டன்ல பண்ணியிருக்கற முதலீடு கூட நம்ம லீகை அடுத்த கட்டத்துக்கு எடுத்துக்கிட்டு போகற ஒரு முயற்சி தான்"

பத்மநாபன்,"அதுக்கு ஒப்பந்தங்களை வாரியத்தின் பேர்ல பண்ணியிருக்கணும். உன் பேரிலும், உன் பொண்டாட்டியோட முதல் பொண்ணு பேரிலும் பண்ணியிருக்கக் கூடாது?"

லலித் மேலும் உஷ்ணமாகி, "தலைவரே, பேச்சு உங்களுக்கும் எனக்கும் தான். இவர் ஏன் குறுக்கில் வர்றார்"

பத்மநாபன் டேபிளைக் குத்தியபடியே எழுந்து," நான் செயலாளர், எனக்கு கேள்வி கேட்கிற உரிமை இருக்கு" என்று உச்சஸ்தாயியில் கூறினார்.

தலைவர் குறுக்கிட்டு, "முதல்ல இரண்டு பேரும் அமைதி ஆவுங்க, தண்ணி குடிங்க"

இருவரும் சற்று ஆசுவாசப்பட்டவுடன் தலைவர் தொடர்ந்தார். "இத பாரு லலித், இதுல நாங்க எதுவும் செய்ய முடியாது. ஏன்னா அந்த ஆள் FERA வரைக்கும் உன் மேல கேஸ் போட்டுட்டான். பேசாம ராஜினாமா பண்ணிட்டு லண்டனுக்கே போயிடு. குறைந்தபட்சம் உன் முதலீடுகள் காப்பாற்றப்படும்".

லலித் புருவத்தை உயர்த்தி, "இல்லேன்னா?"

பத்மநாபன், "சட்டம் கடமையைச் செய்யும்"

"அந்த அளவுக்குப் போயாச்சா? அப்போ நான் மீடியாவுக்குப் போறேன். எல்லார் பற்றியும் சொல்றேன்"

தலைவர் சிரித்தவாறே, "என்ன லலித், இவ்ளோ வெள்ளந்தியா இருக்கீங்க? மக்கள் இன்னிக்கு நீங்க குடுக்கற பேட்டியை உண்மைன்னு நம்புவாங்க. நாளைக்கு நாங்க குடுக்கற பதிலடியையும் நம்புவாங்க. அவங்களைப் பொறுத்தவரைக்கும் டிவியில் காட்டறது தான் செய்தி. உண்மை என்னன்னு அவங்களுக்கு எப்பவுமே எந்த விஷயத்திலும் தெரியாது. வாரியம் சொல்றபடி கேட்கற வரைக்கும் தான் உங்களுக்கு இந்த பதவி, மரியாதை எல்லாம். ஒரு நாளும் நீங்க இதுக்கு எதிரா போகவே முடியாது. போனா நஷ்டம் நமக்குத் தான் - இது எங்களுக்கும் பொருந்தும்."

லலித் இருக்கையிலிருந்து எழுந்தான். "என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. உங்களால ஆனதைப் பார்த்துக்கோங்க" என்று கூறி அறையை விட்டு வெளியேறினான்.

பத்மநாபன் தலைவரைப் பார்த்தார். தலைவர், "இனி பேசிப் பிரயோஜனமில்லை, தூக்கிடுங்க"

****************************************************************************

இடம் - நல்லகண்ணுவின் வீடு. நெடு நாள் நோய்வாய்ப்பட்டிருந்த அவரது மகள் செல்வி இறந்து விட்டாள். பாரு செல்வியின் தோழி என்பதால் கணவன் ரகுவுடன் துக்கம் விசாரிக்க வந்திருந்தாள்.

இருவரையும் பார்த்த நல்லகண்ணு கடுங்கோபத்துடன், 'எங்க வந்தீங்க? அதான் இவ்ளோ வருஷம் படுக்கவெச்சு இப்போ பாடையிலேயும் ஏத்திட்டீங்க, இன்னும் என்ன பாக்கி இருக்கு?"

ரகு,"ஐயா, இன்னமும் பழசையே நினைச்சிக்கிட்டிருந்தா எப்படி? நடந்த தவறுக்கு நாங்க நிறைய தடவை உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுட்டோம். வேணும்னா இங்க எல்லார் முன்னாடியும் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கறோம்"

"சீ, நீங்க எவ்ளோ தடவை மன்னிப்புக் கேட்டாலும் என் பொண்ணு ஆத்மா சாந்தி அடையாதுடா. முதல்ல இங்கேர்ந்து வெளிய போங்க"

இருவரும் வாசலை நோக்கிச் செல்லும்போது, "பாரு, என் பொண்ணை நெருப்புக்குக் குடுத்துட்டு நீ மட்டும் உன் புருஷன் குழந்தைகளோட சந்தோஷமா ரொம்ப நாள் வாழலாம்னு நினைக்காதே, ஆண்டவன் ஒருத்தன் இருக்கான், மறந்துடாதீங்க" என்று சாபம் விடாத குறையாக கத்தினார் நல்லகண்ணு.

வீடு திரும்பும் வழி முழுவதும் பாரு கலக்கத்துடனே இருந்தாள். ரகு மீதிருந்த சந்தேகமும், அவனின் அரசால் புரசலான சூதாட்டத் தொடர்புகளும், நல்லகண்ணுவின் சாபம் கலந்த வயிற்றெரிச்சலும் அவளுக்குள் புயலடிக்க ஆரம்பித்திருந்தன.




ஆட்டம் தொடரும்.....

Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...